💰 கிரிப்டோகரன்சிகளுக்கு விரைவில் தடையா?
In Today's Edition: கிரிப்டோவுக்கு இந்தியாவில் தடையா? | வாரிசுகளை தயார்படுத்த முகேஷ் அம்பானி போடும் திட்டம் | உயரும் அமேசான் பிரைம் விலை | Reading Time: 4 Mins ⏳
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
📣 Note: இன்றைய The Subject Line (TSL) நியூஸ்லெட்டரைப் படிக்கிறதுக்கு நன்றி; இந்த மெயில் உங்களின் Promotions Tab-ல வந்திருந்தா, அதை அப்படியே Move பண்ணி, Primary Tab-க்கு மாத்திடுங்க. இதன்மூலம் தினமும் TSL-ஐ நீங்க மிஸ் பண்ணாம படிக்கமுடியும். ஒருவேளை இந்த மெயில் உங்க நண்பர்கள் மூலம் வந்திருந்தா, தினமும் உங்க இன்பாக்ஸிற்கு நேரடியாக வர, சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. Happy Reading! 😊
⚠️ இன்றைய Weather Alert:
திரும்பவும் தமிழகத்தை கனமழை சீசன் தொடங்கியிருக்கு. டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக அதிக கனமழை எச்சரிக்கையும், சென்னை தென் மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கு. 👇
1. கிரிப்டோ கரன்சிகளுக்கு தடையா? அரசின் திட்டம் என்ன?
வரும் நவம்பர் 29-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. இதையடுத்து அந்தக் கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் புதிய 26 மசோதாக்களின் விவரங்களை நேற்று மக்களவை அலுவலகம் வெளியிட்டது. அதில் ஒன்றாக Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021-ம் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து கிரிப்டோகரன்சிகளுக்கு வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தடைவிதிக்கப்படவிருக்கிறது எனப் பலரும் புரிந்துகொண்டனர். ஆனால், இன்னும் அதுபற்றி அரசு உறுதியாக எதுவும் சொல்லவில்லை என்பதே உண்மை.
மசோதாவிலேயே தடை விதிக்கப்படும் என்றுதானே இருக்கு?
ஆமாம். ``ரிசர்வ் வங்கி சார்பில் டிஜிட்டல் கரன்சி ஒன்றை உருவாக்குவதற்கான கொள்கைகளை உருவாக்கவும், அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடைசெய்யவும் இந்த மசோதா வலியுறுத்துகிறது. இருப்பினும், கிரிப்டோகரன்சிகள் இயங்கும் தொழில்நுட்பத்தை (பிளாக்செயின்) ஊக்கப்படுத்தும் வகையில் சில விதிவிலக்குகள் அளிக்கப்படும்” என்றுதான் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனாலும், மத்திய அரசு உறுதியாக கிரிப்டோகரன்சிகளைத் தடைசெய்யும் எனச் சொல்லமுடியாது.
ஏனெனில், இந்த மசோதாவின் ஆரம்ப வடிவம் 2020-லேயே தயாராகிவிட்டது. இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என அப்போது மக்களவை அலுவலகம் அறிவித்திருந்தது. அப்போதும் இதே வார்த்தைகள்தான் இடம்பெற்றிருந்தன. ஆனால், அப்போது அது விவாதத்திற்கே எடுத்துக்கொள்ளப்படவில்லை.
அடுத்து, ஜூலை மாதத்தில் நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரவில்லை. இந்நிலையில்தான், தற்போது மீண்டும் மக்களவையின் தற்காலிக பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. எனவே மசோதா நிச்சயம் விவாதத்திற்கு வருமா, அதில் என்ன இருக்கிறது, கிரிப்டோகரன்சிகளுக்கு தடை வருமா என்பதெல்லாம் அரசு நாடாளுமன்றத்தில் மசோதாவை தாக்கல் செய்யும் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.
ஆனால்…
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்த அரசின் நடவடிக்கைகளுக்கும் அண்மைக்கால அரசின் நிலைப்பாட்டிற்கும் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன. இதற்கு முன்பு மசோதா தயாராகியும், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாததற்கு காரணமாக அரசின் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது, இதுகுறித்து இன்னும் அதிகம் பரிசீலிக்கவேண்டும் என்பதே. அந்தக் கட்டத்தை தற்போது அரசு கிட்டத்தட்ட தாண்டிவிட்டது எனலாம்.
ஏனெனில், சில நாள்களுக்கு முன்புதான் ரிசர்வ் வங்கி கவர்னர் கிரிப்டோகரன்சிகள் குறித்து எச்சரித்திருந்தார்.
பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த ஆலோசனையிலும், இதன் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், ரிசர்வ் வங்கியும் ஒரு டிஜிட்டல் கரன்சியை உருவாக்கிக்கொண்டிருப்பதாக ஜூலை மாதம் தெரிவித்திருந்தது.
அண்மையில் கிரிப்டோ நிறுவனங்களுடன் அரசும் ஆலோசனை நடத்தி முடித்திருக்கிறது.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, இந்தமுறை நிச்சயம் மசோதா விவாதத்திற்கு வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆனால், அதில் என்ன இருக்கிறது என்பது இப்போதைக்கு அரசுக்கே வெளிச்சம். எனவே, காத்திருப்போம்..!
இந்தியா
அவசர கால கச்சா எண்ணெய்யை வெளியே எடுக்கும் இந்தியா:
அரபு நாடுகளில் எண்ணெய் உற்பத்தி போதுமான அளவு இல்லாததால், கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்து வந்தது. இது பல நாடுகளின் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உலக நாடுகள் பலவும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் சொல்லி கேட்டும் எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து, அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களின் அவசர காலப் பயன்பாட்டிற்காக சேமித்து வைத்திருந்த கச்சா எண்ணெயை மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்த முடிவு செய்திருக்கின்றனர். அமெரிக்கா 5 கோடி பேரல் கச்சா எண்ணெயையும், இந்தியா 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இப்படி வெளியே எடுக்கவிருக்கின்றன.
நாட்டின் பாதுகாப்பு தேவைக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய், இப்படி பிற தேவைகளுக்காக வெளியே எடுக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை. இப்படி உலகின் அதிக எண்ணெய் நுகர்வு நாடுகள், தங்கள் சேமிப்பிலிருக்கும் கச்சா எண்ணெயை பொது பயன்பாட்டிற்கு விடுவது மூலம் சந்தையில் எண்ணெய் விலை குறைந்து, பொருளாதாரத்தில் நேர்மறை விளைவுகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 3 இடங்களில் இப்படி அவசர தேவைகளுக்காக கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்படுகிறது.
வாரிசுகளை தயார்படுத்தும் முகேஷ் அம்பானி:
திருபாய் அம்பானி மறைவுக்குப் பின் முகேஷ் அம்பானிக்கும், அனில் அம்பானிக்கும் ஏற்பட்ட மோதல்களை நாடே அறியும். அந்த நிலை தன் பிள்ளைகளுக்கும் வந்துவிடக்கூடாது என்பதால் இப்போதே ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தின் அதிகாரத்தை எப்படி தன் 3 பிள்ளைகளுக்கும் பகிர்ந்தளிப்பது என்பது குறித்து, தீவிரமாக ஆலோசித்து வருகிறாராம் முகேஷ் அம்பானி. புதிதாக ஒரு டிரஸ்ட் ஒன்றை அமைத்து, அதன்கீழ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியை கொண்டுவரவும் திட்டம் இருக்கிறதாம். அந்த டிரஸ்ட் நிர்வாகத்தில் குடும்பத்தினரை இணைப்பதன் மூலம் மொத்த அதிகாரம் அவர்களிடமே இருக்கும். அதன் கீழ் இயங்கும் பிற நிறுவனங்களில் உரிய நிபுணர்கள் இருப்பார்கள். அதிகாரமும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும். இருப்பினும் இந்த செய்தி குறித்து இதுவரை ரிலையன்ஸ் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை.
தமிழகம்
கோவை முதலீட்டாளர் மாநாடு:
`முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ என்ற முதலீட்டாளர் மாநாடு நேற்று கோவையில் நடந்துமுடிந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இந்த மாநாட்டில், 52,549 கோடி ரூபாய் முதலீட்டில், 92,420 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன. பல்வேறு திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
வழக்கு தொடுத்த வன்னியர் சங்கம்:
நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் மீது, ஜெய் பீம் திரைப்படத்தில், அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறையைத் தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வன்னியர் சங்கம் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
உலகம்
NSO நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டனர். இந்நிலையில், இந்த சட்டவிரோத செயலை எதிர்த்து பெகாசஸ் மென்பொருளை விற்பனை செய்யும், இஸ்ரேலைச் சேர்ந்த NSO நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது ஆப்பிள்.
உயர்ந்த Vi (Vodafone - Idea) கட்டணங்கள்: ஏர்டெல் நிறுவனம் அண்மையில் தன்னுடைய ப்ரீபெய்டு பிளான்களின் கட்டணங்களை உயர்த்தியிருந்தது. தற்போது, அதேபோல Vi நிறுவனமும் கட்டணங்களை உயர்த்தியிருக்கிறது.
உயரும் அமேசான் பிரைம் கட்டணம்: வருடத்திற்கு ₹999 என இருந்த அமேசான் பிரைம் சேவையின் ஆண்டு கட்டணம், டிசம்பர் 14-ம் தேதி முதல் ₹1499 ஆக உயரவிருக்கிறது. இதேபோல ஒரு மாதத்திற்கான கட்டணமும் ₹129-லிருந்து ₹179 ஆக உயரவிருக்கிறது.
ஜெயலலிதா நினைவு இல்லம் வழக்கில் இன்று தீர்ப்பு: ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றிய முந்தைய அரசின் சட்டத்தை எதிர்த்து அவரின் உறவினர்களான ஜெ.தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்.
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த லிஸ்ட்ல சேர்க்கணும், இருக்குற விஷயங்கள்ல ஏதாச்சும் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க!
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்கள் மூலம் பின்தொடர: